அமைச்சர் அன்பில் மகேஷுக்கு H1NI பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும், சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று அதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு அரசு கல்லூரியில் 1,162 இடங்களும், நிர்வாக நிலை கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவத்திற்கான முதுநிலை அரசு இடங்கள் 31, சுயநிதி கல்லூரிகளில் உள்ள முதுநிலை பல் மருத்துவ இடங்களாக 296 தேசிய வாரிய பட்டப்படிப்பு இடங்கள் 94 என மொத்தம் 2,346 இடங்கள் உள்ளன. இந்த இடங்களானது 23 அரசு கல்லூரிகளிலும், 16 சுயநிதி கல்லூரிகளிலும் இருக்கின்றன.

11,178 முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 6,968 பேர் விண்ணப்பித்ததில் 6,893 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக விண்ணப்பங்கள் 2,925-ம் விண்ணப்பிக்கப்பட்டது. அதில், 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக உள்ளன. பல் மருத்துவப் படிப்பிற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்கள் ஆகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும் உள்ளன.

இவை அனைத்திற்குமான கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும். முதல் நாளான நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தய்வு நடைபெறும்.

தமிழகத்தில் தினசரி 100 பேர் அளவிற்கு ஹெச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 56ஆக குறைந்துள்ளது. 6,471 இடங்களில் காய்ச்சல் முகாம்கள், 15,900 பள்ளிகளில் வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 421 பேர் நேற்று வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்குவை பொறுத்தவரை மொத்தம் 4,068 பேர் நேற்று வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது 344 பேர் டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெறுகின்றனர்.

1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஹெச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் வீடு திரும்புவார். அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே