திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், காலை 6.35 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி தெய்வானை அம்பாளுடன் பக்தர்களுக்கு எழுந்தருளினர்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்திற்கு வந்திருக்க கூடிய பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.