டிஜிட்டலில் மெருகேற்றி வெளியாகும் மன்மதன்

டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு, மார்ச் 19-ம் தேதி வெளியாகவுள்ளது ‘மன்மதன்’.

2004-ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் ‘மன்மதன்’. ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்திருந்தார்கள். யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

முதன்முறையாக சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படம் மார்ச் 19-ம் தேதி மீண்டும் வெளியாகவுள்ளது. முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

நந்திதி தேவி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் 150 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மீண்டும் ‘மன்மதன்’ வெளியாகவுள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

மேலும், ‘மன்மதன்’ படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதியிருந்தார் சிம்பு. சமீபமாக மீண்டும் ‘மன்மதன் 2’ படத்தைத் தொடங்க சிம்பு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதை சிம்பு தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து ‘பத்து தல’, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே