சவுதிக்கு வேலைக்கு சென்றவர் அடித்துக் கொலை..!? மனைவி கண்ணீர்..!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி வெளிநாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (44).

இவர் கடந்த 6 ஆண்டுகளாக கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் கிறிஸ்டோபர் என்பவரின் கீழ் சவுதி அரேபியாவில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளன.

ஜார்ஜூக்கு கிறிஸ்டோபர் ராஜ் பணிக்கான ஊதியத்தை சரிவர வழங்கமால் இருந்ததாகவும், இதுவரை 6 லட்சத்திற்கும் மேல் கிறிஸ்டோபர் ஜார்ஜூக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மனைவியை தொடர்பு கொண்டு பேசிய ஜார்ஜ், நிச்சயமிக்கப்பட்ட தனது மகளின் திருணத்திற்கு கிறிஸ்டோபர் வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வாங்கிக்கொண்டு விடுமுறைக்கு வருவதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜார்ஜ் சம்பள பாக்கி தொடர்பாக கிறிஸ்டோபர் இருந்த அறைக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் அவரது செல்போன் எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி ஜார்ஜின் மனைவியை தொடர்பு கொண்டு பேசிய கிறிஸ்டோபர், ஜார்ஜிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவரை ஜார்ஜின் மனைவி பலமுறை தொடர்பு கொண்டும் அவர் இணைப்பை ஏற்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜார்ஜ் அறைக்கு அருகில் தங்கியிருந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் ஜார்ஜின் மனைவியை தொடர்பு கொண்டு அவர் அடித்து கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இறந்த தனது கணவனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவரவும், சம்பந்தப்பட்ட கிறிஸ்டோபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஜார்ஜின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே