வணக்கம் செலுத்தாததால் ஆத்திரமடைந்த சக மாணவரை கத்தியால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர்

சென்னை பல்லாவரத்தில் தமக்கு வணக்கம் செலுத்தாததால் ஆத்திரமடைந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர், சக மாணவரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மாணவர் கார்த்திக் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரியில் தாதா போல் வலம் வந்த கார்த்திக், சக மாணவர்களை மிரட்டி தமக்கு மரியாதை செலுத்த வைத்துள்ளார்.

அனைத்து மாணவர்களும் இவருக்கு அஞ்சிய படியே வலம் வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர் அஸ்வின் கார்த்திக்கிற்கு எவ்வித மரியாதையும் கொடுக்காமல் வணக்கம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கார்த்திக், சக மாணவனை கல்லூரி வாசலிலேயே கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அஸ்வினை மீட்ட பொதுமக்கள், கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கார்த்திக் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் ஏற்கனவே அஸ்வின் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே