சட்டப்பேரவையில் சிரிப்பலை.. காரணம் இது தானாம்..!!

தமிழகத்தில் கொரானா தொடர்பாக எந்த அச்சமும் இல்லை என்பதோடு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் கொரானா மீதான கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க வேண்டும், மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், ரேசன் கடைகளில் கூட மாஸ்க் கொடுக்கலாம், பேருந்து போக்குவரத்தில் நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக செயல்படுகிறார், எனவே அவர் சீனாவுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி குறிப்பிட்ட போது, வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்பது தனக்கும் பொருந்தும் என விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

இந்நிலையில் இன்று கொரோனா குறித்து பேசிய துரைமுருகன் கொரோனாவை விட அதற்கு செய்யும் விளம்பரங்கள்தான் பயமாக இருக்கிறது. போன் செய்தால் இருமுகிறார்கள். சட்டசபை வந்தால் 10 நர்ஸுகள் கையை இப்படி கழுவுங்கள், அப்படி கழுவுங்கள் என கூறி பயமுறுத்துகிறார்கள் என்று வேடிக்கையாக கூறினார். 

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துரைமுருகன் 70 வயதை தாண்டி விட்டதால் கொரோனா குறித்து பயப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

தாங்கள் எல்லாம் புள்ள குட்டிகாரர்கள், உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடை தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம், காப்பாத்துங்க சார் என துரைமுருகன் குறிப்பிட்டபோது சிரிப்பலை தொடர்ந்தது.

ஏசியில் இருப்பவர்களுக்கு கொரானா பாதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், சட்டமன்றத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய துரைமுருகன், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், இங்கு உள்ளவர்களுக்கு மாஸ் வழங்கி காப்பாற்றுங்கள் என்றார்.

70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்கட்சி துணை தலைவர் அச்சம் கொள்கிறார் என்று பதிலளித்த முதலமைச்சர், அச்சப்பட வேண்டாம் என்றும், சிகிச்சை அளிக்க தரமான மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் என்றும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக எந்த அச்சமும் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சட்டசபைக்குள் கொரானா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய சபாநாயகர், மாஸ்க் பயன்படுத்த தேவை ஏற்படும் போது வழங்கப்படும் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே