LATEST NEWS : அனுமதியின்றி சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்: அமைச்சர் சுரேந்திரன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வர அரசு உதவி செய்யாது என்று மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளை சேர்ந்தோர் போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது.

அதே நேரத்தில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.

இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த சீசனில், வழிபாடு நடத்த அனுமதி கோரி இதுவரை 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே சட்ட ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை அமல்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசின் நிலைப்பாடு குறித்து பேட்டியளித்த தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்,

  • சபரிமலைக்கு பெண்களை அழைத்து வர அரசு எந்த முயற்சியும் எடுக்காது.
  • ஊக்கப்படுத்தவும் செய்யாது.
  • 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்கு வந்தால் பாதுகாப்பு வழங்கப்படாது.
  • நீதிமன்ற உத்தரவுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிப்போம் என்று கூறினார்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே