கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
கடந்த வாரம் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்து கொண்டிருந்தனர். 5 பணியாளர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 191 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
விமானத்தை இரவு 7.40 மணியளவில் தரையிரக்க விமானிகள் முயற்சித்தனர். ஆனால் மழை காரணமாக தரையிறக்குவதில் இரு முறை சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் மூன்றாவது முறை 10ஆவது ஓடு தளத்தில் தரையிறக்க முயன்றபோது விமானம் சருக்கிச் சென்றுள்ளது.
மேலும், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேரம் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்வையிட வந்த பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.
ஏனெனில், விபத்து நடந்த கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோரும் பங்கேற்றனர்.