சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைய அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. மக்களை மட்டுமல்லாது, அரசியல் தலைவர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது.
திரையுலகத்தையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தமக்கு கொரோனா தொற்று இருப்பதை அவர் வீடியோ செய்தியாக வெளியிட்டார். தமது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், தம்மை பார்க்க யாரும் வரவேண்டாம் என்றும் உரிமையுடன் அதில் கூறி இருந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது.
இந் நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறி உள்ளது. அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகத்தினரும், அவரது ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.