ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. முரண்பட்டு நின்ற சச்சின் பைலட்டை டெல்லிக்கு வரவழைத்து ராகுல்காந்தி சமரசம் செய்தார். மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் பிரச்சினையை தீர்க்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்த நிலையில், இன்று அம்மாநில சட்டபேரவை கூடியது. காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடியது.
அதில் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உத்தேசித்திருந்தது.
சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளதால், அசோக் கெலாட் அரசுக்கு பெரும்பான்மை காட்டுவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என்று பாஜக நேற்று அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவோம் என காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் அசோக் கெலாட் அரசில் ஒற்றுமையாக இணைந்திருப்பதால், காங்கிரஸ் கட்சியின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.