தமிழக அரசு அறிவிப்புக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்

கமிஷன் வாங்குவதற்கு விலக்கி வைப்பதற்கும் இது உகந்த நேரம் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரியவருகிறது.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நபர்களும் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, பல்வேறு இடங்களில் உணவு பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது, தடை உத்தரவை மீறும் செயலாகும். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்ட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘அண்டை மாநிலங்கள் சில கொரோனா உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர்.

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.

கமிஷன் வாங்குவதற்கு ஒதுக்கி வைப்பதற்கு இது உரிய நேரம் அல்ல. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே