கள்ளக்குறிச்சி: இரும்புக் கம்பியில் இளம்காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் மீட்பு

தாலி கட்டிய கையோடு ஒருகாதல் ஜோடி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டது. அதிலும் கோவிலில் வைத்து தூக்கில் தொங்கியுள்ளனர் இருவரும்.

காதலிப்போர் எல்லோருக்கும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் வாய்ப்புகளை இந்த சமூகம் அத்தனை சீக்கிரம் தந்து விடுவதில்லை.

அப்படியே கல்யாணம் செய்தாலும் கூட நிம்மதியாக வாழ விடுவதும் இல்லை.

இப்படித்தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி கல்யாணம் செய்த கையோடு தற்கொலை செய்து கொண்டுள்ளது.

ஈரியூர் என்ற காட்டுப் பகுதியில் ஒரு கோவில் உள்ளது.

அருஞ்சோலை அம்மன் கோவில் அது. அந்தக் கோவிலின் வளாகத்தில் உள்ள இரும்புக் கம்பியில் ஒரு காதல் ஜோடி தூக்கில் தொங்கியவாறு இருந்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அந்த இளைஞரின் பெயர் குமார். 19 வயசுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் பெயர் கவிதா.

இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெண் நயினார்பாளையம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஆண், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

இருவரும் காதலித்து வந்துள்ளனர். வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் பைக்கில் இந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர்.

அங்கு வைத்து அப்பெண்ணுக்குத் தாலி கட்டியுள்ளார் குமார். அதன் பிறகு இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்து தொங்கி விட்டனர்.

அதேசமயம், இது தற்கொலையா அல்லது யாரேனும் கொன்று கொண்டு வந்து தூக்கில் போட்டு விட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

குமாரின் குடும்பத்தினரும் மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர். எனவே போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே