கே. பாலச்சந்தரின் 90வது பிறந்தநாளில் ரஜினி-கமல் உருக்கமான பேச்சு!

மறைந்த இயக்குனர் பாலசந்தர் பற்றி ரஜினி மற்றும் கமல் இருவரும் இன்று அவரது 90வது பிறந்தநாளில் உருக்கமாக பேசி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க இயக்குனர்களில் ஒருவர் கே. பாலச்சந்தர். அவரது 90வது பிறந்தநாள் இன்று. மறைந்த கே பாலசந்தர் பற்றிய நினைவுகளை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர். கே.பாலசந்தர் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது..
“இன்று என் குருவான கேபி சாரின் 90வது பிறந்தநாள். கே.பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் கூட நான் நடிகனாகி இருப்பேன். கன்னட மொழியில் ஒரு வில்லன் பாத்திரம் அல்லது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு சிறிய நடிகராக இருந்திருப்பேன். இந்த நேரத்தில் நான் மறைந்து போய் இருப்பேன். நான் இன்றும் பெயரும் புகழோடும், ஆண்டவன் புண்ணியத்தில், பெயரும் புகழும், நல்ல வசதியுடன் வாழ்வதற்குக் காரணம் கே. பாலசந்தர் சார் அவர்கள்.

என்னை அவர் தேர்ந்தெடுத்து, எனக்கு பெயர் வைத்து, என்னுடைய மைனஸ் எல்லாத்தையும் நீக்கி, எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்டுகளை எனக்கு காட்டி கொடுத்து, என்னை ஒரு முழு நடிகனாக்கி, நான்கு படங்களில் கான்ட்ராக்ட் போட்டு, இந்த நான்கு படங்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, ஒரு நட்சத்திரமாக தான் இன்று தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மா, வளர்த்த என்னுடைய அண்ணன், அதற்குப்பிறகு பாலசந்தர் சார் தான். நான்கு தெய்வங்கள். அவர் எனக்கு மட்டுமல்ல எத்தனையோ நடிகர்கள் நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரோடு வாழ்ந்தவர்கள் பல பல பல பேர். அவர் உயிரோடு இருக்கும்போது தயாரித்து, இயக்கி, சின்னத்திரை உட்பட, பல லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை கொடுத்தார். அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் காரணமாக இருந்தார்.
நான் எத்தனையோ இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறேன். மணிரத்னம், ஷங்கர் நான் எத்தனையோ இயக்குனர்களிடம் பணியாற்றி விட்டேன். ஆனால் ஒரு இயக்குனர் செட்டுக்கு வந்தால் நடிகர்கள், டெக்னீசியன் உட்பட மேலே இருக்கும் லைட் பாய் கூட எழுந்து வணக்கம் சொல்வார். இந்த அளவுக்கு கம்பீரம் இவரிடம் இருக்கும். அதை நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை. அவர் என்னுடைய குரு என்பதற்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு பர்சனாலிட்டி அவர். தன்னுடைய கடமைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து மிக சீக்கிரமே சென்றுவிட்டார். அவர் இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்து இருக்கலாம். அவ்வளவு பெரிய மகான். அத்தனை பேருக்கும் வாழ்க்கை கொடுத்து நல்ல அர்த்தத்தோடு வாழ்ந்த மிகப்பெரிய மகான் என்னுடைய குரு பாலச்சந்தர் சார்.

அவர் பிறந்த இந்த 90வது பிறந்தநாளில் அவரை நினைவு படுத்திக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது ஆன்மா எங்கே இருந்தாலும் நிம்மதியாக சாந்தியாக இருக்க வேண்டும். நன்றி.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது..

அய்யா கேபி அவர்களுக்கு.. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அய்யா அவர்களுக்கு.. வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பட்டங்களுடன் அவர் அழைக்கப்பட்டாலும் எங்களுக்கு கேபி என்றால் அவரது நினைவு தான் வரும். அவரை நான் முதன் முதலில் வாகினி படப்பிடிப்பு தளத்தில் திரு ஜெமினி மாமா அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தபோது சந்தித்தேன். வெள்ளிவிழா படப்பிடிப்பில் என நினைக்கிறேன். ரொம்ப பம்பரமாக சுழன்று கொண்டிருந்தவர்.. சற்று என்னை பார்ப்பதற்காக நின்றார். அந்த கவனிப்பு பிற்பாடு இவ்வளவு பெரிய உறவாக வழுக்கும் என்று அன்று கனவுகூட காணவில்லை.

அதற்குப் பிறகு படிப்படியாக 16 வயது 17 வயது சிறுவனாக நான் அவரை வந்து சேர்ந்தேன். அவர் வாழ்வில் அவர் எனக்கு கொடுத்த இடமும், என் வாழ்வில் நான் அவருக்கு கொடுத்த இடமும், நாங்கள் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. இயற்கையாக நிகழ்ந்த ஒன்று. இப்பொழுது இதற்குப் பெயர் உறவு என்று சொன்னால் மிகை ஆகாது. அப்பா-மகன் உறவு ஆகவே மாறிவிட்டது.
வீட்டில் ஒரு பிள்ளையாக அவர் என்னை நினைக்கத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. என்னிடம் அவர் நிறைய பேசி இருக்கிறார். அறிவுரை சொல்வதற்காகவும், வசனம் சொல்லிக் கொடுப்பதற்காகவும், கதைகளைப் பற்றியும் பேசியிருக்கிறார், ஏசியும் இருக்கிறார் நல்வழிப்படுத்துவதற்காக.

ஆனால் நாங்கள் இருவரும் பேசிக்கொண்ட உரையாடல்கள் என் பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து ஒரு பதிவு செய்தால் அது 3 ஃபுல் பேப்பர் உள்ளே அடங்கிவிடும். என் வாழ்க்கையில் செய்த பெரிய கெட்டிக்காரத்தனம் அவருடன் கலந்து உரையாடாமல் சொல்வதையெல்லாம் தெளிவாக கேட்டுக் கொண்டதனால், என்னுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையப் பெற்றது என்று சொல்லலாம்.

இன்று கூட அவர் இருந்திருந்தால் இந்த 90வது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என்று நாங்கள் அவரிடம் போய் பர்மிஷன் கேட்டிருப்போம். அதை எப்படி செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பட்டியலிட்டு அவர் கையில் கொடுத்திருப்பார்.

என் கதையில் அவர் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை உத்தம வில்லன் படத்தில் நிறைவேறியது. என்னுடைய வசனங்களை அவர் ஒரு விமர்சகர் கண்ணோட்டத்தில் பார்த்தார், ரசிகராக பார்ப்பார், இது எப்படி தோன்றியது என கேட்பார்.

கடைசி காலங்களில் அவருக்கு ஒரு குழப்பம் வந்துவிட்டது. மேடையில் பேசும்போது என்னை ஒருமையில் பேசுவதா அல்லது ‘அவர்’, ‘இவர்’ என பேசுவதா என்று. அவருக்கு என்றும் நான் அந்த பையன் தான்.

இன்று அந்த மாதிரி ஒரு வழிகாட்டி எத்தனை நடிகர்களுக்கு கிடைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம், வரத்தின் மகிமை என்ன என்று எனக்கு புரிகிறது. என்னை போன்றவர்கள் இருக்கும் வரை, எங்கள் புகழ் இருக்கும் வரை, அவரது புகழும் வாழும். ஏனென்றால் நாங்கள் எல்லாம் அவர் பிடித்து வைத்த பொம்மைகள்.

என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே