தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக, அதிமுக அதிரடியாக பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கின்றன.
அந்த வகையில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் மறைவுக்கு கலைஞரும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம் என அதிரடியாக பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தஞ்சாவூரில் பிரச்சாரத்தின் போது பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா மரண வழக்கை முறையாக விசாரிப்போம் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.
அதற்கு பயந்து தான் எடப்பாடி இவ்வாறு கூறியிருக்கிறார். அப்படி திமுக தான் காரணம் என்றால் வழக்கு போட்டிருக்க வேண்டும்.
தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள். சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஸ்டாலின் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், திமுக கொடுத்த மன உளைச்சலால் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறினார்.
மேலும் பிரேமலதாவின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்று ஒன்று பேசுவார். நாளை ஒன்று பேசுவார்.
கூட்டணி முன்னரும், பின்னரும் மாறி மாறி பேசுகிறார் என விமர்சித்தார்.