ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை நடத்தப்படும் – முதலமைச்சர்

சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் திடீர் என ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நலிவுற்ற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 4.5 லட்சம் பேர் உணவு அருந்துகின்றனர் என்றும்; மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், ஈஷா சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம் ஒருவர்கூட பாதித்து விடக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நோயின் தாக்கத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர்.

மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும், 144 தடை உத்தரவை சிலர் அலட்சியம் செய்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

ஓரடங்கால் விவசாயிகள் மேற்கொள்ளும் எந்த பணிகளுக்கும் தடை இல்லை என்றும்; வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு விற்பனை செய்யப்படும் உணவை வாங்கி சாப்பிட்டார்.

மேலும் அங்கு உணவருந்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் அம்மா உணவக ஊழியர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யவும், உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே