சென்னையில் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி உணவகங்கள் முறையாக செயல்படுகின்றனவா ? உணவு தரமாக வழங்கப்படுகிறதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென ஆய்வு செய்தார்.

சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு சென்ற முதலமைச்சர், அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்டார்.

அவருடன், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாள்தோறும் நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிடுவதாக தெரிவித்தார்.

டெல்லி மத நிகழ்வில் பங்கேற்று ஊர் திரும்பியவர்கள் தாமாக முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட முதல்வர், இஎம்ஐ வசூலிப்பதை தள்ளிவைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

கோவையில் ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே