சிறுநீர் சரியா பிரியலயா? அதுக்கு வெற்றிலையே போதும், எப்படி பயன்படுத்தணும்னு மட்டும் தெரிஞ்சுக்கங்க!

வெற்றிலை மூன்று வகைகளில் உண்டு. ஒன்று சாதாரண வெற்றிலை, இரண்டாவது கம்மாறு வெற்றிலை, மூன்றாவது கற்பூர வெற்றிலை. தற்போது எல்லோரும் சாதாரண வெற்றிலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். கம்மாறு என்று சொல்லகூடிய வெற்றிலை தான் கருமையாக இருக்ககூடிய (கருப்பு வெற்றிலை) காரத்துடன் இருக்கும் வெற்றிலை. கற்பூர வெற்றிலை இலேசாக கற்பூர வாடையோடு இருக்கும். மூன்றும் சுவையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வெற்றிலையில் இருக்கும் சத்துகள் அதை சாப்பிடும் முறை போன்றவற்றை குறித்து முதலில் தெரிந்துகொள்வோம். பிறகு இதன் மருத்துவ குணங்கள் பார்க்கலாம்.
​வெற்றிலை சாப்பிடும் முறை
கார்ப்பு நிறைந்த வெற்றிலையுடன் துவர்ப்பு நிறைந்த பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதுதான் தாம்புலம் என்று அழைக்கிறோம். ஆனால் இப்படி சாப்பிடுவதிலும் ஒரு முறை உண்டு. வெற்றிலையின் காம்பையும் அதன் நுனி பகுதியையும் இலையின் பின்புறம் இருக்கும் நரம்பின் நுனியையும் நீக்கி சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் அதன் மருத்துவ குணம் முழுமையாக பெறமுடியும் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
மற்றொன்று இந்த மூன்றும் சேரும் பக்குவம் தனியானது. அதே போன்று இதை மெல்லும் போது சில விதிமுறைகள் உண்டு. இது குறித்து தனியாகவே கொடுக்கலாம். இப்போது வெற்றிலையை கொண்டு என்னென்ன நோய்க்கு என்னென்ன வைத்தியம் செய்தார்கள் தெரிந்துகொள்வோம்.

​சிறுநீர் பிரிய
வெற்றிலைச்சாறு சிறுநீர் பெருக்கியாக பயன்படுகிறது. சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்கள் சிறுநீர் பிரிவதில் சிக்கலை சந்திக்க நேர்ந்தால் வெற்றிலை சாறு பயனளிக்கும். உடல் கழிவை பிரித்து வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் முக்கிய பணி. சிறுநீரக கோளாறு உண்டாகும் போது இவை தண்ணீரோடு தாதுக்களையும் வெளியேற்றிவிடுகிறது. வடிகட்டிகள் சேதமடையும். இவர்கள் வெற்றிலையை சாறாக்கி அதில் பால் கலந்து குடித்துவந்தால் சிறுநீர் நன்றாக பிரியும்.

​சரும பிரச்சனைக்கு
சருமத்தில் சொறி, சிரங்கு பிரச்சனை இருப்பவர்கள் உள்ளுக்கு மருந்து எடுத்துகொண்டாலும் வெளிப்பூச்சுக்கு வெற்றிலையை மருந்தாக்கி தடவிவந்தால் குணமடையலாம். சுத்தமான தேங்காயெண்ணெயில் வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து எண்ணெய் சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி தினமும் சருமத்தின் மீது தடவி வந்தால் சொரி, சிரங்கு படை பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

​சளி குறைய
நெஞ்சுசளியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அகல் விளக்கில் சூடேற்றி இளஞ்சூட்டில் மார்பில் பற்றுப்போல் போடலாம் சளி பிரச்சனை குறையும். ஒரு வயதுக்கு பிந்தைய குழந்தைகளுக்கும் இம்முறை பயன்படும்.

வளரும் பிள்ளைகளுக்கு வெற்றிலை சாறுடன் சம அளவு துளசி இலையை வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து 5 சொட்டுகள் கொடுத்தால் சளி கரையும். வெற்றிலையில் கடுகு எண்ணெய் தடவி மார்பில் தடவினாலும் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

​வயிறு கோளாறுகள்
மலச்சிக்கல் பிரச்சனை கொண்டிருந்தால் தினமும் காலைவேளையில் வெற்றிலைசாறை வெறும் வயிற்றில் வயதுக்கேற்ப 10 முதல் 30 மிலி அளவு வரை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

வெற்றிலையுடன் மிளகு சேர்த்து இடித்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் பிரச்சனை இருந்தால் வெற்றிலையை மென்று சாப்பிட்டால் தீர்ந்துவிடும். வாய் துர்நாற பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டால் சரியாகும்.

​தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பால் சுரப்பதில் குறைபாடு இருந்தால் மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டால் வெற்றிலையை சூடுபடுத்தி அதை மார்பின் மீது வைத்து கட்டலாம். வெற்றிலை இளஞ்சூடாக இருந்தால் போதுமானது. தாய்ப்பால் சுரப்பு மிக குறைவாக இருந்தால் வெற்றிலையில் விளக்கெண்ணெய் தேய்த்து தணலில் சுட்டு மார்பகத்தில் கட்டி வந்தால் சுரப்பு அதிகரிக்கும்.
மார்பக புண், தீப்பட்ட இடங்களில், காயங்கள் இருக்கும் இடங்கள், மூட்டு வீக்கங்கள் இருக்கும் இடங்களிலும் வெற்றிலையை இடித்து சாறு போட்டால் , வெற்றிலையை இடித்து வைத்து கட்டினால் உபாதை குறையும். வெற்றிலை சாப்பிடுவதற்கு மட்டுமல்ல இவ்வளவு பிரச்சனையையும் சரிசெய்யவும் உதவும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே