நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நிர்பயா பாலியல் மரண வழக்கில் 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அவர்களில் 3 பேரின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அக்சய் குமார் சிங் என்பவரின் மனு மீது உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
முன்னதாக நீதிமன்றத்தில் விசாரணையின் போது அக்சய் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங் 30 நிமிடங்கள் சரமாரியாக வாதாடினார்.
அவரின் வாதம் வருமாறு:
- நிர்பயாவின் மரண வாக்குமூலத்தில் சந்தேகம் உள்ளது. 21 நிமிடங்களில் பேருந்தில் 6 பேரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடியுமா?
- மரண வாக்குமூலத்தில் எந்த குற்றவாளியின் பெயர்களையும் அவர் ஏன் சொல்லவில்லை? இரும்பு கம்பியால் தம்மை தாக்கியவரின் பெயரையும் நிர்பயா சொல்லவில்லையே? என்று பரபரப்பாக வாதாடினார்.
ஆனால் அவரின் எந்த வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வழக்கு விசாரணையின் போது நிர்பயாவின் பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
தண்டனையை மறுசீராய்வு செய்ய கோருவதற்கு பாலியல் குற்றவாளிகளுக்கு தகுதியில்லை என கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
இதன் மூலம் நிர்பயா வழக்கில் உள்ள 4 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையும் உறுதி ஆகியுள்ளது.
அதே நேரத்தில் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஒரு வாரம் அவகாசமும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இதனிடையே தூக்குத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நிர்பயாவின் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.