மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் , தேவ்லாலி நகரிலிருந்து பிஹாரின் தனாபூருக்கு இன்று காலை கிசான் ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு 2020 நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது விவசாயிகளின் நலனுக்காக வேளாண் பொருட்களை சந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில், விரைவில் கொண்டு செல்ல பிரத்யேகமாக கிஸ்ஸான் ரயில்கள் விடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி விவசாயிகள் விளைவித்த அழுகும் தன்மையுடைய வேளாண் பொருட்கள்களான காய்கறிகள் , பழங்கள் , பூக்கள் ஆகியவற்றை உரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல பிரத்யேக கிசான் ரயில் ஆகஸ்ட் 7-ம் தேி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நாசிக் மாவட்டம், தேவ்லாலி நகரிலிருந்து இன்று காலை 11 மணிக்கு பிஹார் மாநிலம் தனாபூருக்கு கிசான் ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலை மத்திய பஞ்சாயத்துராஜ் மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.
வாரம் ஒருநாள் இயக்கப்படும் இந்த கிசான் ரயில் 1,519 கி.மீ. பயணம் செய்து, ஏறக்குறைய 32 மணிநேரப் பயணத்துக்குப் பின் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு தனாபூரைச் சென்று அடையும்.
இந்த ரயில் மூலம் கொண்டு செல்லப்டும் பொருட்கள் பாட்னா, அலகாபாத், கட்னி, சத்னா உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்; இந்த கிசான் ரயில் நாசிக் சாலை, மான்மாத், ஜால்கான், புசாவல், புர்ஹான்பூர், காந்த்வால, இடார்சி, ஜபால்பூர், கட்னி, மாணிக்பூர், பிரயாக்ராஜ், சேகோகி, தீனதயாள் உபாத்யாயா நகர், பக்ஸர் ஆகிய நகரங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பால், மீன் போன்ற பொருட்களையும் கொண்டு செல்லும் விதத்தில் இது விரிவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.