2 வாரத்தில் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!

2021 -22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ரூபாய் 5000 வரை ஊக்கத் தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2021-2022 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை மூலமாக சொத்துவரி ரூ. 375.59 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.225.13 கோடி என மொத்தம் ரூ. 600.72 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் (I/2020-2021) சொத்துவரியில் ரூ.156.41 கோடியும், தொழில் வரியில் ரூ.225.89 கோடியும் என மொத்தம் ரூ.382.30 கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.

சொத்துவரியானது கடந்த 5 நிதி ஆண்டுகளின் முதல் அரையாண்டு சொத்துவரி வசூலினை ஒப்பிடும்போது சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிதி ஆண்டினை தவிர்த்து, இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919ன்படி, இரண்டாம் அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 01.10.2021 முதல் 15.10.2021 செலுத்தி, சொத்துவரியில் ஊக்கத் தொகையாக ஐந்து சதவீதம், அதிகபட்சமாக ரூ.5,000/-வரை பெற்று பயன் அடையலாம்.
சொத்துவரியினை 15.10.2021 தேதிக்கு பிறகு செலுத்தும்பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஏப்ரல்’2021ல் 1,16,294/-, சொத்து உரிமையாளர்ளும் அக்டோபர்’ 2020ல் 94,900 சொத்து உரிமையாளர்ளும், குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி ஊக்கத் தொகை பெற்று பயனடைந்துள்ளனர். 2/2021-22 ஆம் நிதி ஆண்டில், சொத்து உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தி, ஊக்கத் தொகை பெற, பெருநகர சென்னை மாநகராட்சி, பல்வேறு முறைகளில் சொத்து உரிமையாளர்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக, கடன்/பற்று அட்டை/இணையதள வங்கி சேவை /UPI சேவைகள பரிமாற்றக்க கட்டணம்இல்லாமல், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்/ கோட்டம் அலுவலகங்களில் அமைந்துள்ள அனைத்து இ சேவை மையங்களின் முகப்புகளில், வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலம், (காசோலை/வரைவோலை/கடன்/பற்று அட்டை பயன்படுத்தும் வசதி), நம்ம சென்னை மற்றும் பே டி எம் – கைப்பேசி செயலி மூலம், மற்றும் BBPS -(Bharat Bill Payment System ) போன்ற சேவை அமைப்பு முறை ஆகிய வழிமுறைகள் உபயோகப்படுத்தி சொத்துவரியினை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே