எந்தத் திசையில் தலைவைத்து படுப்பது நல்லது? திசைகளுக்கான பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்..

முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம்

நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம். தூக்கம் மனிதனுக்கு எப்படி அவசியமோ, அதேபோல் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அதேப் போல் தூங்கும் திசையையும் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். சரி வாருங்கள் இந்த பதிவில் நாம் எந்த திசையில் தூங்குவது நல்லது என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பனவற்றை காண்போம்.

வடக்கு திசை:

வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கருதப்படுகிறது. ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் ஆரோக்கியம் மோசமாவதோடு, செல்வம், வேலை, குடும்ப நிம்மதி போன்றவை பாழாகும் என நம்பப்படுகிறது. முக்கியமாக பிணங்களின் தலையை வடக்கு திசையில் தான் வைப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள்.

வடக்கு திசையில் தலை வைக்கக்கூடாதற்கான அறிவியல் காரணம்:

பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும். ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே வடக்கிற்கு முதலில் ‘நோ’ சொல்லுங்கள்.

தெற்கு திசை:

இந்த திசை மிகச்சிறப்பான திசையாக கருதப்படுகிறது. ஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

கிழக்கு திசை:

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும். முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு நன்மையை தரும் கிழக்கு:

கிழக்கு திசையில் குழந்தைகளும், இளைஞர்களும் தூங்குவதும் படிப்பதும் மிகவும் நல்லது. ஏனெனில் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். கணக்குவழக்கு பார்ப்பவர்கள் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், அவர்களின் மூளை தூக்கத்திலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குமாம்.

மேற்கு திசை:

மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் காணக்கூடும். மேலும் இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

தூங்கும் போது, முதலில் சிறந்த திசையாக கருதப்படுவது தெற்கு, கிழக்கு,பின்பு தான் மேற்கு. வடக்கு திசையில் மட்டும் எக்காரணம் கொண்டும் தலை வைத்து படுக்காதீர்கள். மேலும் மேற்சொன்ன திசைகள் உங்களுக்கு பல நன்மைகளை தரும். இதுவரை நீங்கள் மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்குமேல் பின்பற்றி வாழ்வில் ஏற்றத்தை காணுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே