இந்திய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்குவதை விடுத்து ஏன் இந்தப் புலம்பல்? இங்கிலாந்துக்கு விவ் ரிச்சர்ட்ஸ் அறிவுரை

அகமதாபாத், சென்னை டெஸ்ட் பிட்ச்கள் பற்றி ஏன் இங்கிலாந்து அணியினர் புலம்புகின்றனர், இந்தியா என்பது சுழற்பந்து வீச்சுக்கான மண் அங்கு செல்லும் போது தயாரிப்புடன் தான் செல்ல வேண்டும் என்று மே.இ.தீவுகளின் முன்னாள் அதிரடி வீரர், லெஜண்ட் சர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத், சென்னை டெஸ்ட் பிட்ச்கள் பற்றி ஏன் இங்கிலாந்து அணியினர் புலம்புகின்றனர், இந்தியா என்பது சுழற்பந்து வீச்சுக்கான மண் அங்கு செல்லும் போது தயாரிப்புடன் தான் செல்ல வேண்டும் என்று மே.இ.தீவுகளின் முன்னாள் அதிரடி வீரர், லெஜண்ட் சர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

அதோடு 4வது டெஸ்ட் போட்டிக்கும் இப்படித்தான் பிட்ச் அமைப்பார்கள், அமைக்க வேண்டும் என்றார் விவ் ரிச்சர்ட்ஸ்.

இந்நிலையில் முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகள் பற்றி எனக்கு கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகள். நான் கேள்வி பற்றி சற்றே குழம்பினேன், ஏனெனில் பிட்ச் பற்றி நிறைய முணுமுணுப்புகள், புலம்பல்கள்.. இப்படிப் புலம்புவர்கள் ஒன்றை உணர வேண்டும் என்றே நான் நினைக்கிறேன், சில வேளைகளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதக ஆட்டக்களங்களில் குட் லெந்திலிருந்து பந்துகள் எகிறுமே அப்போது பேட்ஸ்மென்களுக்கு பிரச்சினை என்றுதானே பலரும் பார்த்தனர். ஆனால் பேட்ஸ்மென்கள் அதனுடன் பழகி ஆடத்தொடங்கி விட்ட காலமும் உண்டல்லவா?

இப்போது இதற்கு நேர்மாறான சூழல், இந்தியா என்றால் ஸ்பின், அது ஸ்பின் மண், இந்தியா சென்றால் இப்படித்தான் பிட்ச் இருக்கும் என்று தெரியாதா, அதற்கு தக்கவாறு தயாரிப்பில்தான் இருக்க வேண்டும்.

விரைவில் டெஸ்ட் முடிந்து விட்டது, இது இங்கிலாந்துக்கு தங்கள் பேட்டிங் குறைபாடுகளைக் களைந்து கொள்ள நல்ல நேரம். 4வது டெஸ்ட்டுக்கும் இதே பிட்ச்தான் போடுவார்கள். நான் இருந்தாலும் இதேபிட்சைத்தான் கேட்பேன்.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தங்களுக்குச் சவுகரியமான பிரதேசத்தில் இருந்தார்கள், இப்போது அந்த சவுகரிய மண்டலத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்கள், தங்களுக்கு இந்தியாவில் என்ன கிடைக்கும் என்பதை உணர்ந்து அதற்குத் தக்க அதை சந்திக்க தயாராவதுதான் சரி. ஸ்பின் ஸ்பின் அதுதான் அங்கு, டெஸ்ட் மேட்ச் என்பது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உலகின் அனைத்துப் பிட்ச்களிலும் இப்போது விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறவில்லையா? இப்போது இந்தியாவில் இருக்கிறீர்கள் எனவே அங்கு என்ன நமக்கு அளிக்கப்படும் என்பதை தெரிந்து அதை எதிர்கொள்ள வழி தெரிந்திருக்க வேண்டாமா?

உங்களை யார் ரன்களை அழகாக மரபான ஆட்ட முறையில் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவது, இந்திய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க வேண்டியதுதானே. மரபான முறையில் அழகாக ரன்கள் எடுக்க வேண்டும் என்று எந்த ரூல் புத்தகத்தில் உள்ளது? ஆக்ரோஷமாக ஆடுங்கள்.

புலம்பல்கள் நிறுத்தப்பட வேண்டும், இந்தியா பயன்படுத்தும் ஆயுதங்களில் கிளாசிக்காக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் போது அது நன்றாகவே உள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார் விவ் ரிச்சர்ட்ஸ்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே