பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் போலி மதுபானங்களை குடித்த 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் பல மாநிலங்களில் கேளிக்கை விடுதிகள் மற்றும் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக விரக்தியடைந்துள்ள மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் கல்லச்சாராயம், போலி மதுபானம் மற்றும் ஹேண்ட் சானிடைசர்களை போதைக்காக உட்கொண்டு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இது மத்திய மாநில அரசுகளுக்கு புதிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் ஆந்திராவில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் சானிடைசர்களை குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அதேபோல் பஞ்சாப்பிலும் போலி மதுபானங்களை குடித்து கடந்த 2 நாட்களில் 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன் தரன் மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜூலை 29 ஆம் தேதி இரவு அமிர்தசரஸ் தர்சிகாவில் உள்ள முச்சால் மற்றும் டாங்ரா கிராமங்களில் இருந்து முதல் 5 இறப்புகள் பதிவாகியுள்ளது. 2 பேர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தனர்.
அமிர்தசரஸ் ஸ்ரீ குரு ராம் தாஸ் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்று 3 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே போலி மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக முச்சால் கிராமத்தில் வசிக்கும் பல்விந்தர் கவுரை கைது செய்துள்ள காவல்துறையினர், ஐபிசி பிரிவு 304 மற்றும் கலால் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.