நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.