உடன்பிறப்புக்களால் இனமான பேராசிரியர் என்றழைக்கப்படும் அன்பழகனின் வாழ்க்கைப் பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.

திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றை., பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வே.கி.சம்பத் ஆகியோரை எப்படி தவிர்த்துவிட்டு எழுத முடியாதோ, அதேபோன்று, அக்கட்சி வரலாற்றின் தவிர்க்க முடியாத நபர் பேராசிரியர் க.அன்பழகன்.

திமுகவினரால் பேராசிரியர் என்று அன்பொழுக அழைக்கப்படும் க.அன்பழகனை, மறைந்த கலைஞர் கருணாநிதி, இனமான பேராசிரியர் என்றே அனைத்துக் கூட்டங்களிலும் அழைத்து, வரவேற்பார்.

97 வயதான பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதியை விட ஒன்றரை வயது மூத்தவர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் எனும் கிராமத்தில், கல்யாணசுந்தரம் – சுவர்ணாம்பாள் தம்பதியின் 5 குழந்தைகளில் மூத்தவராக 1922ஆம் ஆண்டு பிறந்தார் அன்பழகன். இவரது இயற்பெயர் ராமையா.

தந்தை பெரியார், காங்கிரசில் இருந்தபோது, கதர் இயக்கத்தை பரப்பினார்.

அப்போது, காங்கிரசில் இருந்த தந்தை கல்யாணசுந்தரம், 1925ஆம் ஆண்டு பெரியார் காங்கிரசை விட்டு விலகியபோது, அவரும் விலகினார்.

1939ஆம் ஆண்டு பிள்ளைகளின் படிப்புக்காக அன்பழகனின் குடும்பம் சிதம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது.

தந்தை பெரியார் நீதிக்கட்சிக்கு தலைமை வகித்தபோது, சிதம்பரத்தில், அன்பழகனின் தந்தை அதன் கிளை அமைப்பை தொடங்கினார்.

அப்போது, நீதிக்கட்சியில், தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் அன்பழகன்.

தனது தந்தையின் வழியில், பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அன்பழகன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தன்னை சுயமரியாதைக்காரராகவே, அடையாளப்படுத்தினார்.

பெரியாரிடம் சுயமரியாதையைக் கற்றிருந்த ராமையா, மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.

சிறுதுளி பெருவெள்ளம்போல், அண்ணாமலை பல்கலைகழகத்தில், திராவிட மாணவர் மன்றத்தை முதன்முதலாக கட்டமைத்து, பேரறிஞர் அண்ணாவை “ஆற்றோரம்” என்ற தலைப்பில் பேச வைத்தார், அன்பழகன்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிப்பை முடித்த அன்பழகன், 1944 முதல் 1957ஆம் ஆண்டுவரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

பேராசிரியராக இருந்தபோது, இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்பழகனை, “பேராசிரியர் தம்பி” என்றே பேரறிஞர் அண்ணா அழைத்து வந்தார்.

அதுவே பின்னாளில் அவரது நிரந்தர பட்டமாகிப் போனது.

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகி, திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா தொடங்கினார்.

பேரறிஞர் அண்ணாவுக்காக, தந்தை பெரியாரை விட்டு விலகி வந்தவர்களில், பேராசிரியர் அன்பழகனும் ஒருவர்.

1949 ஆம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில், செப்டம்பர் மாத மழைக்காலத்தில், திமுகவை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, அங்கிருந்த நீலமேகம், ஈ.வே.கி.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்களோடு இருந்தவர்களில், பேராசிரியர் அன்பழகனும் ஒருவர்.

திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், தனது மறைவு வரையில், அக்கட்சியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும், தன்னுடைய பங்களிப்பை செலுத்தியவர்.

இவரது பேச்சாற்றல் குறித்து அறிந்திருந்த பேரறிஞர் அண்ணா, திருவாரூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேச வைத்தார்.

அப்போது, திராவிடத்தையும், சுயமரியாதையையும், அன்பழகன் அனல் பறக்க பேச, அந்த கூட்டத்திற்கு, பேரறிஞர் அண்ணாவை காணவந்திருந்த இளைஞர் கருணாநிதி, அன்பழகனை சந்தித்து உரையாடினார்.

அங்கு தொடங்கியது தான், பேராசிரியருக்கும், கலைஞருக்குமான நட்பு. அந்த நட்பு ஏறத்தாழ 75 ஆண்டுகளாக, சிறு பிணக்குகள் இன்றி தொடர்ந்தது.

1957ஆம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு தேர்வான க.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினராக 9 முறை பதவி வகித்துள்ளார்.

இதுதவிர, சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒருமுறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1977ஆம் ஆண்டு முதல், தாம் இறக்கும் வரை, தொடர்ந்து, 43 ஆண்டுகள், திமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவர்.

திமுக ஆட்சிக்காலங்களில் நிதித்துறை, கல்வித்துறை அமைச்சராக பதவிவகித்தார்.

திமுக தலைவராக பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்திய அன்பழகன், பின்னாளில், நாவலர் நெடுஞ்செழியனின் எதிர்ப்பை, எம்ஜிஆர் உதவியோடு முறியடித்து, கலைஞர் கருணாநிதியை திமுகவின் தலைவராக்கினார்.

அதேபோன்று, கலைஞர் உயிருடன் இருக்கும்போது, அப்போது சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலினை, கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே திமுகவின் எதிர்காலம் தளபதிதான் என்று முழங்கியவர்.

இதனால் எழுந்த முனுமுனுப்புகளை உதறித்தள்ளிய பேராசிரியர் அன்பழகன், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை, உள்ளன்புடன் பார்த்து மகிழ்ந்தவர்.

கலைஞரோடு நெருக்கமாக இருந்தது மட்டுமின்றி, பல முடிவுகளை கருணாநிதி திடமாக எடுக்க அச்சாரம் போட்டவர் அன்பழகன்.

இவரை, பெரியப்பா என்றே அன்போடு அழைக்கும் மு.க.ஸ்டாலின், தனது தந்தை மீது காட்டிய அதே அன்பை இவரிடத்திலும் காட்டினார் என்பார்கள்.

1983ஆம் ஆண்டு, இலங்கையில் வாழும் தமிழர்களின், தனி தமிழ் ஈழக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்களோடு சேர்ந்து, எம்எல்ஏ பதவியை உதறித் தள்ளியவர்களில் க.அன்பழகனும் ஒருவர்.

மேலும், சட்ட நகல் எரிப்புப் போராட்டத்திலும், இவர் உட்பட பத்துப்பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.

வாழ்க திராவிடம், “தமிழர் திருமணமும்., இனமானமும்” உட்பட மொத்தம் 16 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

1945ஆம் ஆண்டு வெற்றிச்செல்வி என்பவரை மணந்த அன்பழகன், அவரது மறைவுக்குப் பிறகு, சாந்தகுமாரி என்பவரை மணந்தார்.

பேராசிரியர் அன்பழகனுக்கு 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.

திமுகவில், நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சு பாணியை, கவியரசு கண்ணதாசன் போன்றோர் பின்பற்ற, பேராசிரியர் க.அன்பழகனின், ஆதார அடிப்படையிலான அனல்பறக்கும் பேச்சு பாணியை, திமுகவின் அடுத்த தலைமுறையினர் பலரும் பின்பற்றத் தொடங்கினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில், படித்தவர்கள், அறிஞர் பெருமக்கள், தொண்டர்களாக, நிர்வாகிகளாக பெரும்பாலானோர் இடம்பெற அடித்தளமாக விளங்கியவர், பேராசிரியர் அன்பழகன்.

தனித்தமிழ் உணர்வாளராகவும், திராவிட இயக்க சிந்தனையாளராகவும் விளங்கிய பேராசிரியர் அன்பழகன், இனமான உணர்வு, பகுத்தறிவு, மொழி உணர்வு ஆகிய முப்பெரும் கொள்கைகளில், இறுதிவரை உறுதிப்பிடிப்புடன் இருந்து மறைந்திருக்கிறார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மாலை, தனது வீட்டிலிருந்து, வீல் சேரில் அமர்ந்தபடி, அந்த பகுதியை வலம் வந்தது தான் க.அன்பழகன் வீட்டிற்கு வெளியே வந்து சென்ற இறுதி பயணமாகவும் இருந்தது என்கின்றனர், திமுகவினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே