தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 44,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கபினி அணையில் இருந்து 40,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 1,700 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.