பொதுமுடக்க தளர்வு காரணமாக அதிகமான மக்கள் சென்னைக்குத் திரும்ப வருவதால் கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து குடிநீர் வழங்கல் துறை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகிறது.

அதனால் கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் சென்னைக்கு ஒரு நாளைக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கத்திலும் மக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

அப்போது, வழக்குரைஞர் சூரியபிரகாசம் தரப்பில், கரோனா பொதுமுடக்க தளர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து அதிக அளவிலான மக்கள் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர்.

எனவே சென்னைக்கு 1,200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே