மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
மு.கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், அவரது மகனுமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ள மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்தில், அவரது உருவச்சிலையை காணொலி வாயிலாக திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், “சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா என்பது போல சொந்த ஊர் மீது பாசம் வைத்திருந்தவர் கருணாநிதி என தெரிவித்தார். அவரது தந்தை முத்துவேலர் மூலமாகவே, பல்துறை ஆற்றல் கருணாநிதிக்கு வந்ததாக அவர் கூறினார்.
குளித்தலை, தஞ்சாவூர், சேப்பாக்கம் என எத்தனை தொகுதிகளில் அவர் போட்டியிட்டாலும் இறுதியாக அவர் போட்டியிட்டது திருவாரூரில்தான் என தெரிவித்த ஸ்டாலின், கருணாநிதியின் மகன் என்பதில் தமக்கு கர்வம் இருப்பதாகவே தெரிவித்தார்.