கேரளாவில் தரைமட்டமான 19 மாடி கட்டிடம்…

கேரள மாநிலத்தில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட மராடு அடுக்குமாடிக் குடியிருப்பு இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மராடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.

இதன்படி, இந்த கட்டிடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன.

இன்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து 2 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

கட்டடத்தை சுற்றி 200 மீட்டர் தொலைவிலுள்ள வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அந்தப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அருகிலுள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணியளவில் 2 கட்டிடங்களும் இடிக்கப்படுகின்றன.

இதனால் குவிய உள்ள கட்டிட கழிவுகளை அகற்றுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவை அருகில் உள்ள ஏரியில் கழிவுகள் விழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டிடங்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து போராட்டங்கள் நடப்பதை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே