குரூப் 4 தேர்வில் முறைகேடு….

சமீபத்தில் வெளியான குரூப் – 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 வெவ்வேறு பதவிகளில் காலியாக இருந்த 9,398 இடங்களுக்கு கடந்த 2019 செப்டம்பர் 1-ம் தேதி தேர்வு நடைபெற்று முடிவுகள் 2019 நவம்பர் 12-ல் வெளியிடப்பட்டது.

16 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. 

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின், இரு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்களில் 40 பேர், முதல் 100 இடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்களில் 40 பேர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள்ளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையடுத்து தேர்வு எழுதிய மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்; வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர் என்றும் தேர்வர்கள் மத்தியில் வினா எழுந்துள்ளது 

ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் – 4 தேர்வு நடைபெற்ற நேரத்தில் கமுதி வட்டாட்சியர் குரூப் – 4 தேர்வுக்காக கூடுதலாக வழங்கப்பட்ட OMR விடைத்தாள்களை அவருடைய அலுவலகத்தில் 10 நாட்கள் வரை பதுக்கி வைத்திருந்து பிறகு TNPSC அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

விடைத்தாள்களை பதுக்கி வைத்திருந்த விவகாரம் தொடர்பாக கமுதி வட்டாட்சியர் மீனலோசனத்திடம் மாவட்ட அதிகாரிகள் TNPSC அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களுக்குள்ளாக தேர்ச்சி பெற்றிருப்பது பிற தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே மாவட்டத்தின் இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் மாநில அளவில் முதல் 100 இடங்களைப் பிடித்திருப்பதில் முறைகேடு எதுவும் நடைபெற்றதா?

விடைத்தாள்களை ஏன் 10 நாட்கள் வரை பதுக்கி வைத்திருந்தனர்? என்பது குறித்து TNPSC உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிற தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே