பிரதமர் மோடி இன்று சென்னை வர இருக்கும் நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் காரணமாக, சென்னை மாநகர காவல்துறை சார்பாக போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

உயர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரி வாயு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.

டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வரும் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர், இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.

விரிவு படுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பகல் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

இந்நிலையில், சென்னையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை கட்டணமில்லாமல் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரை யிலான மெட்ரோ ரயில் சேவை இன்று புதிதாக தொடங்கப்பட உள்ளதால் இன்று மக்கள் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே