பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளிட்ட பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி, உடல்நிலைக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.லட்சுமணனுக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
78 வயதான ஏ.ஆர்.லட்சுமணன், சென்னை மற்றும் கேரளா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர்.
2 ஆயிரமாவது ஆண்டில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2001-ல் ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தவர்.
பின்னர் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு சட்ட ஆணைய தலைவராக செயல்பட்டு வந்தார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான குழுவில் தமிழக பிரதிநிதியாக ஏ.ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டிருந்தார்.