உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த  வேதனை அடைந்தேன். நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் தலைசிறந்த வழக்கறிஞர்.

இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர்.

அவர்  சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,  கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றியவர்.

பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை விதித்து தீர்ப்பளித்தவர்.

சென்னை பார் கவுன்சில் செயலாளராகவும், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தால் முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டவர்.

நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள், தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர். இவர் பல நூல்களையும் எழுதிய பெருமைக்குரியவர்.

அன்னாரின் மறைவு  தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும்.நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நீதித்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு; அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே