திருத்துறைப்பூண்டி அருகே 18 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வாக்குக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக தினந்தொறும் ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் லட்சக்கணக்கான பணம், தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழ்க்காடு சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை சோதனையிடுகையில் அதில் 18 கிலோ தங்கம் மற்றும் பணம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பணம் எடுத்த செல்லப்பட்டது தெரிந்தது.
இதனையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தையும், 18 கிலோ தங்க நகைகளையும் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.
கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல், பணம் புழக்கம் இல்லாமல் பொதுமக்கள் வாடியிருக்கும் நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் லட்சக்கணக்கில் பணம், கோடி கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.