கோவையில் 10 மாத குழந்தை உட்பட 5 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கொரோனா பாதிப்பில் இருந்து கோவையில் 10 மாத குழந்தை உட்பட 5 பேர் பூரண குணமடைந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையில் இந்த தகவல் சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில அமைந்துள்ளது.

கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரயில்வே பெண் மருத்துவர் மற்றும் அவரது 10 மாத குழந்தை, பணிப்பெண் ஆகிய மூவருக்கும் கொரோனோ தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதேபோல் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர், ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய இளம்பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த 5 பேரும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர்கள் 5 பேரையும் வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவர்களும், மாவட்ட நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில் 59 பேர் கோவையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவேண்டும் என விரும்புவதாகவு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கோவை 2-ம் இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் அந்த மாவட்டத்தில் இருந்து 5 பேர் நலம் பெற்றிருப்பது கோவை மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இன்று கோவையில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் வீடுகள் உள்ள பகுதிகளில் கண்டெயின்மென்ட் நடவடிக்கைகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே