தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு

சென்னையில் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயது பெண் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதத்துக்கு பிறகு கிடுகிடுவென உயர்ந்தது.

சில நாட்களில் இந்திய அளவில் 10 வது இடத்தில் இருந்த தமிழகம் இரண்டாவது இடத்துக்கு வந்தது. இதனால் தமிழக அரசு மேலும் நடவடிக்கையை கடுமையாக்கியது.

நிபுணர் குழு அமைப்பது, கண்காணிப்பு குழு அமைப்பது என நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இதுவரை சிகிச்சையில் இருந்த 40-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர்.

ஆனாலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்கிற நிலையில் 2 பேர் 45 வயது நபர்கள்.

47,057 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். ஒரு ஆய்வகத்துக்கு கூடுதலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனை 9,527. தொற்று உறுதியானவர்கள் நேற்றைய நிலவரம் 911.

நேற்று மேலும் 58 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஈரோட்டில் ஒருவர் இறந்ததால் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 11 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே