காட்டுமன்னார்கோவில் பட்டாசு தொழிற்சாலை விபத்து; தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தனியார் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்ற நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர்.

அதேபோல் கடலூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெடி விபத்து குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், குருங்குடியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர், பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே