ஆயுளை நீட்டிக்கும் அதிசயப்பொருள் சாகாமூலிகை சீந்தில், இது தரும் நன்மைகளையும் தெரிஞ்சுக்கங்க!

கொடி வகையை சேர்ந்த சீந்தில் கொடி அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பெயருக்கேற்றப்படி இவை உடலுக்கு அமிர்தமான ஆரோக்கியத்தை தருகிறது.
வறட்சியைத் தாங்க கூடியது சீந்தில் கொடி என்பதால் பரவலாக எல்லா இடங்களிலும் இதை பார்க்க முடியும். கொடி என்றாலும் கூட கொடி தரையில் ஊன்றி தழைக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக இருக்கும் பூ ஆண் பூ என்றும் தனியாக இருக்கும் பூ பெண் பூ என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். நரம்புகள் தெளிவாக இருக்கும். கிளைகளில் சுரப்பி புள்ளிகள் இருக்கும். கொடியிலிருந்து ஆலமரம் போன்று விழுதுகள் தொங்கி இருக்கும். காய்கள் உருண்டு இருக்கும். பழமாகும் சிவப்பாக இருக்கும். இளம் சீந்தல் கொடியை காட்டிலும் முற்றிய கசப்பு மிக்க சீந்தல் கொடிக்கே மருத்துவ குணங்கள் அதிகம்.
​ஆயுள் அதிகரிக்க
ஆரோக்கியமாக உடல் இருந்தால் ஆயுளும் கூடும். அந்த ஆரோக்கியத்தை உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் மட்டும் தான் பெறமுடியும். சீந்தில் கொடியை சாகா மூலி என்று அழைப்பார்கள். இதை உள்ளுக்கு எடுத்துவந்தால் எதிர்ப்புசக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெருகும்.
சீந்தில் கொடியை காயவைத்து பொடித்து வைக்கவும். இதை பசும்பாலில் கற்கண்டுத்தூள் சேர்த்து பாலில் கலந்து குடித்துவந்தால் ஆயுள் அதிகரிக்கும்.

​சர்க்கரைக்கு மருந்தாக
உடலில் இன்சுலின் சுரப்பு குறையும் போது தான் சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறுகிறது. சீந்தில் கொடி இன்சுலின் சுரப்பு அதிகரித்து குளுக்கோஸ் அதிக உற்பத்தியாவதை தடுத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவு குறைப்பதில் இவற்றின் பங்கும் பெருமளவு உண்டு என்று தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவை உடலுக்கு பக்கவிளைவுகளையும் உண்டாக்குவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

சீந்தில் கொடி இலைகளை பிரித்து நிழலில் உலர்த்தி கொள்ள வேண்டும். இந்த பொடியை காலையும் மாலையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

​உடல் பலம் பெற
பொதுவாக காய்ச்சலுக்கு பிறகு உடல் பலவீனமாக இருப்பது உண்டு. சிலருக்கு இயல்பாகவே உடல் வலு குறைந்தது போன்று இருக்கும். சீந்தில் கொடியை இடித்து குளிர்ந்த நீரில் ஊறவைக்க வேண்டும். 10 மணி நேரம் கழித்து அதை அப்படியே கடைந்து நீரை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். அதில் மேலும் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். தொடர்ந்து வெயிலில் வைத்து எடுக்கும் போது அந்த பாத்திரத்தின் அடியில் வெண்மையான மாவு போன்ற பொருள் கிடைக்கும். இதுதான் சீந்தில் மா அல்லது சீந்தில் சர்க்கரை என்றழைக்கபடுகிறது.

காய்ச்சலுக்கு பிறகு வயதுக்கேற்ப ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரை வாயில் இட்டு நீர் குடிப்பதால் கடும் காய்ச்சல் உபாதைக்கு பிறகு வலிவிழந்த உடல் பலமாக கூடும்.சீந்தில் சர்க்கரை இருமல், மண்ணீரல், வாந்தி, ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஈரல் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் ஆரம்ப கட்டத்தில் இதை சாப்பிட்டு வந்தால் ஈரல் பலமாகும்.

​வயிறு கோளாறுகள்
நாள்பட்ட வயிறு குறைபாடுகளுக்கு சீந்தில் கொடி சீராக பயன்படும். ஆயுர்வேதத்தில் வயிற்று கோளாறு பிரச்சனைகள் தீர்க்க இவை பயன்படுத்தப்படுகிறது. இரைப்பு புண் பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள் சீந்தில் கொடி சாற்றை எடுத்துகொண்டால் இரைப்பு புண்களை குணப்படுத்துகிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை குறைப்பதால் வயிற்றுப்புண் குறையும்.
நாள்பட்ட செரிமான பிரச்சனை கொண்டிருப்பவர்கள் சீந்தில் கொடியுடன் அதிமதுரப்பொடி சிறிதளவு எடுத்து, அதோடு சோம்பு. பன்னீர் ரோஜா சேர்த்து நீர் விட்டு ஊறவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி தினமும் கால் டம்ளர் அளவு குடித்துவரவேண்டும். இது வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

​மூட்டுவலிக்கு மருந்து
மூட்டுகளில் உண்டாகும் வீக்கம் மற்றும் எலும்பு சேதத்தை குறைக்க இதை பயன்படுத்தலாம். முடக்கு வாதம் பிரச்சனைகளில் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. எலும்புகளுக்கு உரமூட்டுவதால் எலும்புகளின் மென்மையை நீக்கி வலிமை தருகிறது இதனால் வயதனாலும் எலும்புகள் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. சிறந்த ஆன் டி ஆக்சிடண்ட் என்பதால் உடல் உறுப்புகளின் செயல்திறனை பன்மடங்கு அதிகரிக்கிறது.

சிலருக்கு உள்ளங்கை மற்றும் பாதங்களில் எரிச்சல் உண்டாககூடும். எலும்பு கூட்டுகளின் செயல்பாட்டை சீராக்குவதில் சீந்தில் கொடிக்கு மிகப்பெரும் பங்குண்டு. மூட்டுகளில் வீக்கத்தை கட்டுப்படுத்தவும், மூட்டுவலியை போக்கவும் இவை உதவுகிறது. வாத நோய்களுக்கு சீந்தில் சுக்கு பால் கஷாயம் மருந்தாக எடுத்துகொள்ளலாம்.

​புண்களுக்கு அருமருந்து
சீந்தில் இலையை அனலில் வாட்டி இளஞ்சூட்டோடு வதக்கி புண்களின் மீது போட்டு கட்டி வர புண்கள் விரைவாக ஆறும். புண் வீக்கம் குறையும். விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சீந்தில் கொடி பயன்படுத்திய பிறகு காயங்கள் விரைவாக ஆறியது கண்டறியப்பட்டது மேலும் காயம் ஆழமாக இருந்தாலும் அந்த இடத்தில் இணைப்பு திசுக்கள் திறம்பட வளர்ந்ததும் கண்டறியப்பட்டது.
எனினும் இந்த ஆய்வுகள் மனிதர்களிடம் ஆய்வு செய்து நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதை முன்னோர்கள் காயத்துக்கு மருந்தாகவே பயன்படுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே