முகம் வயசான மாதிரி இருக்கா, காரணம் இந்த 6 விஷயமாவும் இருக்கலாம்! இனி செய்யாதீங்க!

அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அழகோடு சருமத்தையும் வயது தெரியாமல் பாதுகாக்க வேண்டும். அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் பெரும்பாலும் சருமத்தையும் இளமையாக வைத்திருக்க உரிய பராமரிப்பை மேற்கொள்கிறார்கள். ‘அதனால் தான் வயதானாலும் அவர்களது முகம் இளமையான தோற்றத்தை கொண்டிருக்கிறது. இன்னும் சிலர் இளமையானவர்களாக இருந்தாலும் கூட வயதான தோற்றத்தை கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் சருமத்துக்கு அறியாமல் நாம் செய்யும் பராமரிப்புகளே. இதற்கு உணவு முறையும் வாழ்க்கை முறையும் கூட காரணங்களாகிறது.
​மிதமிஞ்சிய இனிப்பு
ஆறுவிதமான சுவையில் எல்லோருக்கும் பிடித்த சுவையில் முதலில் இருப்பது இனிப்பு வகை தான். அதிக இனிப்பு வகைகள் வெள்ளை சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் கொண்டிருக்கும் இனிப்புகள் உடலுக்கும் ஆரோக்கியம் அல்ல.
சருமத்துக்கும் ஆரோக்கியம் அல்ல. சரும செல்களை பாதிப்பதோடு சருமத்தை விரைவாக தளர்ச்சியடையவும் செய்கிறது. அதனால் இனி மிதமிஞ்சிய இனிப்பிலிருந்து எட்டி நில்லுங்கள். அதற்கு மாற்றாக நாட்டுசர்க்கரை, வெல்லம், தேன் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்.

​கொழுப்பும் அவசியம்
உடலுக்கு கொழுப்பு சத்தும் அவசியம் ஆனால் அவை குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். உடல் பருமனை உண்டாக்கிவிடும் கொழுப்பு இல்லாத உணவுகளை எடுத்துகொள்வது, அதிக கொழுப்பு நிறைந்த உணவுக்கு அடிமையாகவும் என இரண்டுமே தவறானது.

கொழுப்புச்சத்து இல்லாத சருமம் வறட்சியையும் முதிர்ச்சியையும் விரைவாக கொண்டு வரும். அதனால் அளவான ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் அவசியமே.

​தூக்கமும் சருமமும்
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி 8 மணி நேர தூக்கம் அவசியம். ஆனால் பொழுது போக்கு நிகழ்ச்சிக்காக, பணிக்காக என்று உரிய நேரத்தில் தூங்காமல் இருப்பதும், தூக்கத்தை கெடுக்கும் வகையில் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் உடல், மன ஆரோகியத்தோடு சரும ஆரோக்கியத்தையும் கெடுக்கும். செல்கள் உடலில் வளர்வதும், அழிவதும் புதிய செல்கள் உருவாவதும் சருமத்துக்கு புத்துணர்ச்சியையும், பொலிவையும், பளபளப்பையும் அதிகரிக்கும்.

தூக்கமின்மை பிரச்சனையால் செல்கள் அழிவதோடு அந்த இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்தில் தங்கி முதிர்ச்சியான தோற்றத்தை வெளிப்படுத்தும். தற்போது இளம்பெண்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு உள்ளாவதும், தூக்கமின்மையால் சரும பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துவருகிறது.

​செயற்கை அழகு மோகம்
அழகான சருமத்தை மேலும் அழகுப்படுத்தி கொள்ள விரும்புவதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள். அதோடு முகத்தில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பிரத்யேகமான செயற்கை மேக் அப் நாடுவது வழக்கம். எப்போதும் அழகு க்ரீம்கள், லோஷன், அழகு தரும் பொருள் என்று எதையாவது முகத்தில் அப்பிகொண்டே இருப்பது அதை பயன்படுத்துபவர்களுக்கு அழகாக தோன்றலாம். ஆனால் சருமத்துக்கு அவை பயனளிக்காது இதனால் இயல்பாக வெளியேற வேண்டிய இறந்த செல்கள் சருமத்தில் தேங்கிவிடக்கூடும்.

இயற்கையாக சுரக்க வேண்டிய சீபமானது பணியை நிறுத்துவிடுவதோடு சருமத்தில் சுருக்கங்கள் உண்டாக காரணமாகும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் மிக விரைவாக இளவயதிலேயே தெரிய ஆரம்பிக்கிறது. இன்னும் சிலர் இயல்பான மேக் அப் பயன்படுத்தினாலும் அதை இரவு நேரங்களில் கலைக்காமல் விடுவதும் கூட சருமத்தை பாதிக்க செய்யும்.

​சூரிய ஒளி படாத சருமம்
சருமத்தில் சூரிய ஒளி படாமல் இருக்கத்தான் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துகிறோம். இவை சரியானதும் கூட ஆனால் உச்சி நேர சூரிய ஒளி சருமத்துக்கு ஆகாது. அந்த நேரத்தில் மட்டுமே சூரிய ஒளி சருமத்தில் பரவாமல் தடுத்தாலே போதுமானது. சூரியனின் புற ஊதாக்கதிர்கள் அதிகம் தாக்கும் இந்த நிலையில் சூரியனிடமிருந்து தப்பிக்க சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது. குறைந்தது அதிகாலை நேரத்தில் 10 நிமிடங்களாவது சூரிய ஒளி சருமத்தில் படுமாறு நிற்பது மிகவும் நல்லது. சருமத்தோடு வைட்டமின் டி சத்தும் கூடுதலாக கிடைக்கும்.

​மன அழுத்தம்
புன்னகையோடு இருந்தால் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் தேடி வரும். கவலைகளை மனதில் சுமந்துகொண்டே இருந்தால் மன சோர்வும், மன கவலையும் அதிகரிக்கும். இந்த கவலைகள் தான் முகத்தில் பிரதிபலிக்கவும் செய்யும். அதிகமான கவலைகள் முகத்தில் வேகமாகவே தளர்வுகளை உண்டாக்கிவிடும்.
இவை தவிர வேறு பல காரணங்களாலும் சருமத்தில் இளவயதில் முதிர்ச்சி தெரியக்கூடும் என்றாலும் மேற்கண்டவை நம்மால் தடுக்க, தவிர்க்க முடிந்த காரணங்களே என்பதையும் கவனத்தில் கொண்டால் சரும பொலிவாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே