பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர்: அஸ்வினை தேர்வு செய்த ஐசிசி!

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக ஐசிசி தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அற்புதமாக விளையாடினார். பிப்ரவரியில் நடைபெற்ற 3 போட்டியில் 24 விக்கெட் வீழ்த்தியதுடன், 176 ரன்களும் அடித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார் அஸ்வின். இதனால் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும் கெளரவித்து விருது வழங்கவதாக ஐசிசி அறிவித்திருந்தது. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதத்திலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்திருந்தது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தது.

ஜனவரி மாதத்திற்கான விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே