பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காலமானார்

‘எவனோ ஒருவன்’ படத்தின் இயக்குநர் நிஷிகாந்த் காமத் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 50

‘டோம்பிவில்லி ஃபாஸ்ட்’ என்கிற மராத்திய திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார் நிஷிகாந்த். அந்தத் திரைப்படம் மராத்தி திரையுலகில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

தொடர்ந்து அந்தத் திரைப்படத்தைத் தமிழில், மாதவனை நாயகனாக வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்றாலும் படம் பாராட்டுகளைப் பெற்றது.

அடுத்தடுத்து ‘மும்பை மேரி ஜான்’, ‘ஃபோர்ஸ்’ (காக்க காக்க ரீமேக்), ‘லாய் பாரி’ (மராத்தி), ‘த்ரிஷ்யம்’ (இந்தி ரீமேக்) என அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றன. 

கடைசியாக நிஷிகாந்த் 2022ஆம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த ‘தர்பதர்’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

அண்மையில் இவர் கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சினை காரணமாக ஹைதராபாத் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது அவருக்கு ஏற்கனவே இருந்து குணமான பிரச்சினை. மீண்டும் தலை தூக்கியதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று (ஆகஸ்ட் 17) காலை சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டதாகத் தகவல் பரவியது. இதனை ரிதேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பிரபலங்களும், மருத்துவமனை நிர்வாகமும் மறுத்தது.

அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்கள்.

இதனிடையே, மாலை சிகிச்சை பலனின்றி நிஷிகாந்த் காமத் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே