நயன்தாரா ஏன் பேட்டி கொடுப்பது இல்லைனு தெரியுமா?

நயன்தாரா தான் ஏன் பேட்டிகள் அளிப்பது இல்லை என்று கூறியது பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கிறார்கள். நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. பேட்டிகள் கொடுக்கவோ, பட விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளவோ மாட்டார்.
நயன்தாரா பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. தான் பட விழாக்களில் கலந்து கொண்டால் அந்த படங்கள் ஓடாது என்று நயன்தாரா நம்புகிறார். தன்னை நம்பி பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படக் கூடாது என்று பட விழாக்களில் நயன்தாரா கலந்து கொள்வது இல்லையாம்.

நயன்தாரா பேட்டிகள் கொடுக்காமல் இருப்பதற்கும் ஒரு காரணம் வைத்திருக்கிறார். 10 ஆண்டுகள் கழித்து நயன்தாரா கடந்த ஆண்டு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் நயன்தாரா கூறியதாவது,

நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. எனக்கு கூட்டம் சரிபட்டு வராது. நான் பேட்டிகளில் கூறியது பலமுறை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதெல்லாம் ரொம்ப ஓவராக இருந்தது. என் வேலை படங்களில் நடிப்பது மட்டும் தான் என்றார்.

சர்ச்சைகளை தவிர்க்கவே பேட்டி கொடுக்காமல் இருக்கிறாராம் நயன்தாரா. லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தில் நயன்தாரா வழக்கறிஞராக நடிக்கிறாராம். அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மேலும் ஆர். ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அந்த படம் ஓடிடியில் அல்ல மாறாக தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். தன் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் அந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவும் நடிப்பதாக இருந்தது. முதலில் ஓகே சொன்னவர் பின்னர் விக்னேஷ் சிவனை சந்தித்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை உச்சத்தில் இருப்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

லாக்டவுனால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகி தீயாக பரவியது. இது குறித்து அறிந்த நயன்தாரா தான் நலமாக இருப்பதாக கூறினார். விக்னேஷ் சிவனோ, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கும், நயனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே