கொரோனா அறிகுறிகள் இருந்ததால் முதியவரை குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 60 வயதான முதியவர். இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அந்த முதியவர் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இதனைக் காரணம் காட்டி அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த அந்த முதியவர் அப்பகுதி சாலை ஓரத்தில் படுத்துத் தூங்கியுள்ளார். இதனைப் பார்த்த மக்கள் அவரைப்பற்றி விசாரிக்க முதியவர் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், விசாரணை நடத்தி அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.
அதன் பின்னர் அவர் படுத்திருந்த இடமானது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த முதியவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர்.