ஊரடங்கு காலத்தில் 90% மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலைகள், சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு விவரம்:
கொரோனா பரவலால் பொதுமுடக்க அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டதட்ட 3 மாதங்களுக்கு பிறகு தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து தொழிற்சாலைகளுக்கு அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக நூற்பாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலம் முடியும் வரை தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவே மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு:
மேலும், கொரோனா தாக்கம் முடியும் வரை 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலித்த தொகையை வரும் மாதங்களின் மின் கட்டணத்தில் சரிபடுத்திக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளின் நிர்வாக அலுவலகங்களில் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது.
இந்த நடவடிக்கையால் தொழிற்சாலைகள் மூடும் நிலைமைக்கும், அழிகின்ற நிலைக்கும் செல்லும் என்பதை மின் பகிர்மான கழகம் உணர வேண்டும். தொழிற்சாலைகளிடமிருந்து அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்கும் மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கையை பார்க்கும் போது, பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போலத்தான் உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.