தேர்தல் ஆணையம் முறையாகத் தேர்தலை நடத்தவேண்டும் – மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புரிந்துகொண்டு மாநிலத் தேர்தல் ஆணையம் முறையாகத் தேர்தலை நடத்தவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து பிறகு மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே 2016-ல் தி.மு.க சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அப்போது அரசுச் செயலாளர் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.

அதில் 1991-ம் மக்கள் தொகை அடிப்படையில் 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 2011-ம் ஆண்டுக்கான மக்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முரண்பாட்டை உணர்ந்துதான் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலத் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புரிந்துகொண்டு தேர்தலை முறையாக நடத்தவேண்டும் என்றும்;

9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு அ.தி.மு.கவுக்கு மரண அடி என்றார்.

தேர்தலை நிறுத்தவேண்டும் என்று தி.மு.க கோரவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை தி.மு.க உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே