தஞ்சையில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை – 4,000 புத்தகப் பைகள் பறிமுதல்..!!

தஞ்சாவூரில் கண்டெய்னர் லாரியில் வந்த 4,000 புத்தகப் பைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பயணிகளின் உடமைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூரில் இன்று (மார்ச் 4) காலை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சோதனை செய்த போது, கண்டெய்னர் லாரியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஸ்கூல் பேக் சுமார் 4,000 இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து, கல்வித்துறை அலுவலர்கள் வந்து விளக்கமளித்தனர்.

அதில், ஹரியானா மாநிலத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்க இந்த ஸ்கூல் பேக் வரவழைக்கப்பட்டு, கும்பகோணத்திற்கு கொண்டு சென்று குடோனில் வைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த பையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

இதனால், உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே