தெலுங்கு நடிகர் ராணா சமூக வலைதளங்களில் திடீர், திடீர் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார்.
அந்த ட்வீட்டை பார்த்து பலரும் வாழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இரு வீட்டாரும் கலந்து கொண்டு திருமண தேதியை முடிவு செய்துவிட்டார்கள் என்று சமூக வலைதளவாசிகள் கூறினார்கள்.
இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று கூறி அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ராணா.
ராணா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பல திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ராணா கடந்த 12ம் தேதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ஷாக்கே இன்னும் தீராத நேரத்தில் இந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மிஹீகா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கும், ராணாவுக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர்.
இருவருக்கும் பல ஆண்டுகளாக பழக்கம். ஆனால் அந்த பழக்கம் தற்போது தான் காதலாக மாற அதை இரு வீட்டாரிடமும் சொல்லி கல்யாணத்திற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
ராணாவுக்கு நல்லது நடக்காதா என்று காத்திருந்த பெற்றோர் மிஹீகாவை முழுமனதுடன் தங்கள் மருமகளாக ஏற்று நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்துள்ளனர்.
மிஹீகா, ராணா இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று டோலிவுட் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
ஆனால் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு இதை மறுத்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் பாபு கூறியதாவது :
இன்று நடைபெற்றது நிச்சயதார்த்தம் அல்ல. திருமணத்துக்குப் பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்யவேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இணைந்து இன்று விவாதித்தன.
நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கும் திருமணத் தேதி குறிப்பதற்கும் முன்பு மணமக்களின் பெற்றோர்கள் சந்தித்துக் கொள்வது தெலுங்குக் குடும்பங்களின் வழக்கமாகும். அதுதான் இன்று நடைபெற்றுள்ளது என்று கூறினார்.