திமுகவின் புகார் நாடகத்தனமானது – அமைச்சர் காமராஜ் மீண்டும் குற்றச்சாட்டு

திருவாரூர் அருகே கீழகொத்தங்குடி காட்டாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் போது ஆற்றின் மட்டம் பார்த்து ஆற்றுநீர் சீராக செல்லும் வகையில் நல்லமுறையில் தூர்வார வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆய்விற்கு பிறகு அமைச்சர் இரா.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசின் உதவியால் கடந்த ஆண்டு விவசாயம் மிக சிறப்பாக இருந்தது.

அதுபோல் இந்த ஆண்டும் விவசாயம் சிறப்படைய வேண்டும் என்பதற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு முன்பாக குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக துரிதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. 

திருவாரூர் மாவட்டத்தில் ரூ23 கோடி மதிப்பில் 88 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து பணிகளை பொருத்தவரை ரூ 21 கோடி மதிப்பில் 106 பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வர் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை குறித்த நேரத்தில் குறைபாடு இல்லாமல் முடிப்பதற்காக 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து பணிகளை விரைவுபடுத்தி உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் 98 ஆயிரத்து 752 மனுவினை அளித்தார்கள்.

அப்போது அவர்கள் மனுவில் உள்ளதாக தெரிவித்த, சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் போக்குவரத்துத் சார்பாக ஒரு கோரிக்கை கூட மனுவில் இல்லை.

அதில் உணவுப் பொருட்கள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் திமுகவிடம் உதவி கேட்ட மனுக்களும், முகாந்திரம் இல்லாத மனுக்களும் மட்டுமே இருந்தன.

மனுவில் என்ன இருக்கிறது என்பதைக்கூட படித்து பார்க்காமல் அனுப்பி வைத்து, அரசின் அவசரகால பணிகளுக்கு இடையுறாக இருக்கலாமா என்று கேட்டோம். இதனை ஆதாரபூர்வமாக நிருபித்துள்ளோம்.

தேவைப்பட்டால் திமுக நிர்வாகிகளையும், பத்திரிக்கையாளர்களையும் நேரடியாக மனுவில் குறிப்பிப்பட்டுள்ள முகவரிக்கு அழைத்துச் சென்று நிருபிக்க தயார் எனக் கூறினோம்.

இதனை எதிர்கொள்ள தயாரில்லாத திமுக, அக்கட்சியின் நிர்வாகி இளங்கோவன் வழியாக நாங்கள் பொய் சொல்வதாக கூறுகிறது.

எங்கள் தரப்பில் 100சதவீத உண்மை உள்ளது. மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசிற்கும் ஏற்பட்டுள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கில் இதுபோன்ற திசைதிருப்பும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது.

இதனை தவிர்த்து ஆக்கபூர்வமான செயல்களில் திமுக ஈடுபட வேண்டும்.

கரோனா ஊரடங்கை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் கூடுதல் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டன.

அதுபோல் ஜூன் மாதத்திற்கும் ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். அதற்கான டோக்கன் மே 29 முதல் 31 ஆம் தேதி வரை வீட்டிற்கு வந்து நேரடியாக வழங்கப்படும்.

அதற்கான பொருட்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும். பொதுமக்கள் டோக்கனில் குறித்துள்ள நேரத்தில் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்றுச் செல்லலாம் என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே