அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்..!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் மாநில அரசை மீறி சூரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாநில நிதிஉரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதலாம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

உயர் சிறப்பு அந்தஸ்து என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டும் செல்லும் பணியை சூரப்பா பார்த்து வருவதாகவும்; இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனிடையே உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும் கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி திரட்டிக்கொள்ளலாம் என்றும் சூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவையும் மாநில அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணியினர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக்கழகத்தை பாதுகாக்ககோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே