சென்னை: பெண்கள் திருமண வயது வரம்பு உயர்வு குறித்த பிரதமரின் அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர், 16 -18 வயதில் திருமணம் செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடும், ரத்தசோகை இருப்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
எனவே, பெண்களின் திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலப்பதாக அறிவித்தார். அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கை அடிப்படையில் திருமண வயது வரம்பு உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக திமுக எம்பி கனிமொழியும் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.